விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)
![](http://178.128.105.246/cars-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/RC_Catherdal_Secunderabad.jpg/220px-RC_Catherdal_Secunderabad.jpg)
விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (Basilica of Our Lady of the Assumption) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் செக்கந்திராபாத் நகரில் அமைந்துள்ள சிறப்புமிக்க கத்தோலிக்க வழிபாட்டு இடம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இக்கோவில் செக்கந்திராபாத் நகரில் சரோஜினி நாயுடு சாலையில் உள்ளது. இக்கோவில் கட்டப்படுவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் ஆயர் காரூ என்பவரும் அருள்தந்தை டானியேல் மர்ஃபி என்பவரும் ஆவர். இக்கோவில் 1854இல் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள்களில் இக்கோவில் ஐதாராபாத் உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் கோவிலாக இருந்தது. ஆனால் 1886இல் இது அந்நிலையை இழந்தது.
1871ஆம் ஆண்டில் சில கன்னியர் இத்தாலியின் தூரின் நகரிலிருந்து இங்கு வந்து ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினர். அது புனித அன்னா பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படுகிறது.
பெருங்கோவில் நிலைக்கு உயர்த்தப்படல்[தொகு]
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இக்கோவிலை 2008, நவம்பர் 7ஆம் நாள் இணைப் பெருங்கோவில் (en:minor basilica) என்னும் நிலைக்கு உயர்த்தினார்.
கோவிலின் சிறப்புகள்[தொகு]
புனித அன்னை மரியா கோவில் செக்கந்திராபாத் நகரில் முக்கியமான வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்று. இதன் கலைப்பாணி “இந்திய-கோத்திக்” ஆகும். இதன் வளைவுக் கட்டுகளும், தாங்கு தூண்களும் தனிச் சிறப்புடையன.
இக்கோவிலில் மைய பீடம் தவிர இரு பக்கங்களிலும் புனிதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல துணைப் பீடங்கள் உள்ளன. மேலும் 1901இல் இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட மூன்று பெரிய மணிகள் இக்கோவிலுக்குச் சிறப்பூட்டுகின்றன.
வெளி இணைப்புகள்[தொகு]
புனித மரியா கோவில், செக்கந்திராபாத் பரணிடப்பட்டது 2013-12-15 at the வந்தவழி இயந்திரம்